Skip to main content

கேரளாவில் இன்று 7 ஏர் இந்தியா விமான ஊழியர்கள் உட்பட 58 பேருக்கு கொரோனா தொற்று: சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தகவல் 

திருவனந்தபுரம், 

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா சனிக்கிழமை திருவனந்தபுரத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: கேரளாவில் இன்று 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த 10 பேரும், பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த 9 பேரும், கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த 8 பேரும், கொல்லம், இடுக்கி, எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா 4 பேரும்,  காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த 3 பேரும், திருவனந்தபுரம் மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலா 2 பேரும், கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் உள்ளனர். மேலும் ஏர் இந்தியா விமானத்தை சேர்ந்த 7 ஊழியர்களுக்கும் இன்று நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்றைய பட்டியலில் நுரையீரல் நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்த ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்தவரின் பரிசோதனை முடிவும் சேர்க்கப்பட்டுள்ளது. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 31 பேர் வெளி மாநிலங்களிலிருந்தும், 17 பேர் வெளிநாடுகளில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களில் 19 பேர் மகாராஷ்டிர மாநிலத்தையும், 9 பேர் தமிழ்நாட்டையும், தலா ஒருவர் தெலங்கானா டெல்லி மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர். பாலக்காட்டைச் சேர்ந்த ஒரு சுகாதாரத்துறை பெண் ஊழியருக்கும் நோய் பரவி உள்ளது. மேலும் கொரோனா நோயாளிகளுடன்  தொடர்பில் இருந்ததின் மூலம் 2 பேருக்கு நோய் பரவியுள்ளது. இன்று 10 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இவர்களில் 4 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 3 பேர் திருச்சூர் மாவட்டத்தையும்,  தலா ஒருவர் திருவனந்தபுரம், கோட்டயம் மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர். தற்போது மருத்துவமனைகளில் 624 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 575 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.  கேரளாவுக்கு இதுவரை வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 1,27,089 பேர் வந்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் 17, 720 பேரும், கப்பல் மூலம் 1,621 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து சாலை வழியாக 97, 952 பேரும்,  ரயில்கள் மூலம் 9,796 பேரும் வந்துள்ளனர். கேரளாவில் பல்வேறு மாவட்டங்களிலாக 1,30,157 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 1,28,953 பேர் வீடுகளிலும், 1,204 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். இன்று கொரோனா அறிகுறிகளுடன் 243 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 3,206 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை 65,002 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில்  62,543 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது . இது மட்டுமில்லாமல் சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 12,255 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 11,232 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. இன்று புதிதாக நோய் தீவிரம் உள்ள பகுதிகளில் 5 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரம்  மாவட்டத்தில் உள்ள மாணிக்கல்,  பாலக்காடு மாவட்டத்திலுள்ள பாலக்காடு நகரசபை பகுதி,  தத்சம்பாறை, பட்டாம்பி மற்றும் கோட்டயம் மாவட்டத்திலுள்ள மாடப்பள்ளி ஆகிய இடங்கள் நோய் தீவிரமுள்ள பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து கேரளாவில் நோய் தீவிரமுள்ள பகுதிகளின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

date