Skip to main content

கேரளாவில் இன்று 7 சுகாதார துறை ஊழியர்கள் உட்பட  62 பேருக்கு கொரோனா தொற்று: சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தகவல்

திருவனந்தபுரம், 
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: கேரளாவில் இன்று 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த 19 பேருக்கும்,  கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த 16 பேருக்கும்,  மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 8 பேருக்கும், ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த 5 பேருக்கும், கோழிக்கோடு மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா 4 பேருக்கும், கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த 3 பேருக்கும், கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த 2 பேருக்கும், வயநாடு மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் இன்று நோய் கண்டறியப்பட்டுள்ளது.

இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 18 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 31 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். 13 பேருக்கு கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் நோய் பரவியுள்ளது. இதில் 7 பேர் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஆவர். இவர்களில் 3 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், தலா 2 பேர் கண்ணூர் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர். இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்த 13 பேரும்,  தமிழ்நாட்டில் இருந்து வந்த 12 பேரும், குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா 2 பேரும், உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவரும் உள்ளனர். இன்று 3 பேருக்கு நோய் குணமாகி உள்ளது. இவர்கள் கொல்லம் கோட்டயம் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதுவரை கேரளாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் என்னிக்கை 794 ஆகும். இதுவரை நோய் குணமானவர்களின் எண்ணிக்கை 515 ஆகும்.  தற்போது 275 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரளாவுக்கு இதுவரை வெளி நாடுகளிலிருந்து விமானம் மூலம்  7,303 பேரும், கப்பல் மூலம் 1621 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து சாலை வழியாக 76, 608 பேரும், ரயில் மூலம் 3,108 பேர் உட்பட இதுவரை வந்தவர்களின் எண்ணிக்கை 88,640 ஆகும். தற்போது கேரளாவின் பல்வேறு மாவட்டங்களிலாக 91,084 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 90,416 பேர் வீடுகளிலும், 668 பேர் மருத்துவமனையிலும் உள்ளனர். இன்று கொரோனா அறிகுறிகளுடன் 182 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 52, 771 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதித்ததில் 51,045 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. இதுதவிர சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கம் கொண்ட 7, 672 பேரிடம்  பரிசோதனை நடத்தியதில் 7,147 பேருக்கு நோய் இல்லை என தெரிய வந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 2,026 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இன்று கேரளாவில் மேலும் 9 இடங்கள் ஹாட்ஸ்பாட் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது கேரளாவில் மொத்தம் உள்ள ஹாட் ஸ்பாட் பகுதிகள் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

date