Skip to main content

கேரளாவில் இன்று 67 பேருக்கு கொரோனா தொற்று,  மருத்துவமனையில் 415 பேருக்கு சிகிச்சை: கேரள முதல்வர் பினராய் விஜயன் பேட்டி 

திருவனந்தபுரம், 

கேரள முதல்வர் பினராய் விஜயன் திருவனந்தபுரத்தில் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் இன்று மிக அதிகமாக 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 29 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 8 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 6 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், 5 பேர் மலப்புரம் மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களையும், தலா 4 பேர் திருச்சூர் மற்றும் கொல்லம் ஆகிய மாவட்டங்களையும், தலா 3 பேர் காசர்கோடு மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர். இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 33 பேர் வெளி மாநிலங்களிலிருந்தும், 27 பேர் வெளிநாடுகளில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து  வந்த 15 பேருக்கும், தமிழ்நாட்டிலிருந்து வந்த 9 பேருக்கும், குஜராத்திலிருந்து வந்த 5 பேருக்கும், கர்நாடகாவிலிருந்து வந்த 2 பேருக்கும், டெல்லி மற்றும் பாண்டிச்சேரியிலிருந்துவந்த தலா ஒருவருக்கும் இன்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோயாளியுடன் தொடர்பிலிருந்த 7 பேருக்கு இன்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 10 பேருக்கு நோய் குணமாகி உள்ளது. இதுவரை கேரளாவில் கொரோனா நோய் கண்டுபிடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 963 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 415 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று வரை கேரளாவில் வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. 1,04,336 பேர் வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் கண்காணிப்பில் உள்ளனர்.

இவர்களில் 1,03,528 பேர் வீடுகளிலும், 808 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். இன்று கொரோனா அறிகுறிகளுடன் 186 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 56, 704 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 54,836 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. இன்று கேரளாவில் 9 பகுதிகள் நோய் தீவிரம் உள்ள பகுதிகளுக்கான  பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து நோய் தீவிரமுள்ள பகுதிகளின் 68 ஆக உயர்ந்துள்ளது. நேற்று கண்ணூர் மாவட்டம் தர்மடத்தை சேர்ந்த ஆசியா என்ற 61 வயது பெண்  மரணமடைந்துள்ளார். இதையடுத்து கேரளாவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு ஏராளமான ஆட்கள் வர தொடங்கி இருப்பதால் நோய் பரவல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நாம் நோய் தடுப்பு நடவடிக்கையில் அடுத்த கட்டத்தை அடைந்துள்ளோம். வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை எந்த காரணம் கொண்டும் கட்டுப்படுத்த முடியாது. இதனால் நோய் பரவும் அபாயம் அதிகமாக இருக்கிறது. இதனால்தான் வெளியிலிருந்து வருபவர்கள் கண்டிப்பாக கேரளாவில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்தால் மட்டுமே அவர்கள் குறித்த விவரங்கள் நமக்குத் தெரியவரும். இதன் மூலமே நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும். இல்லாவிட்டால் கேரளாவில் நோய் சமூகப் பரவல் ஏற்படும் அபாயம் உள்ளது. வெளிநாடுகளிலிருந்து பல லட்சம் பேர் கேரளாவுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் அனைவரும் ஒரே சமயத்தில் இங்கு வர முடியாது. அதனால் கர்ப்பிணிகள் நோயாளிகள் முதியவர்கள் உள்பட முன்னுரிமை அடிப்படையிலேயே அவர்கள் கேரள வர அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிமாநிலங்களில் இருந்து இதுவரை கேரளா வர  3,80,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களில் 2,16,000 பேருக்கு பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 1,01, 789 பேர் கேரளா வந்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து 1,34,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதுவரை 11, 189 பேர் கேரளா வந்துள்ளனர். ஒருகட்டத்தில் கேரளாவில் 16 பேர் மட்டுமே நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தனர். ஆனால் இப்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர். மகாராஷ்டிராவிலிருந்து வந்த 72 பேருக்கும், தமிழ்நாட்டிலிருந்து வந்த 71 பேருக்கும், கர்நாடக மாநிலத்திலிருந்து வந்த 35 பேருக்கும்  மிக அதிகமாக நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 133 பேருக்கு இதுவரை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து அனுமதி இல்லாமல் தொழிலாளர்கள் கேரளாவுக்கு வருவதாக தகவல் வந்துள்ளது. எனவே அனுமதி இல்லாமல் கேரளாவுக்கு வந்தால் அவர்களுக்கு கடுமையான அபராதத்துடன் 28 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் ஏற்படுத்தப்படும். கைதிகளுக்கு கொரோனா தொற்று இருப்பதன் மூலம் போலீசார் மற்றும் நீதிபதிகளுக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குற்றவாளிகளை கைது செய்யும்போது அவர்களை போலீஸ் நிலையத்திற்கும், நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதி செய்யப்படும். இன்று பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ளன. மாணவர்கள் அச்சம் இன்றி தேர்வு எழுதினர்.  தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

date