சென்னையிலிருந்து வந்தவர் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று: முதல்வர் பினராய் விஜயன் தகவல்
திருவனந்தபுரம்,
கேரள முதல்வர் பினராய் விஜயன் செவ்வாய்க்கிழமை திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் இன்று 5 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 3 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், தலா ஒருவர் பத்தனம்திட்டா மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் சமீபத்தில் வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் வந்தார்கள் ஆவர்.ஒருவர் சென்னையில் இருந்து வந்துள்ளார். இன்று யாருக்கும் நோய் குணமாகவில்லை. கேரளாவில் இதுவரை நோய் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 524 ஆகும். தற்போது 32 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 23 பேருக்கும் கேரளாவின் வெளியே இருந்து தான் நோய் பரவியுள்ளது. 11 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். சென்னையில் இருந்து 6 பேரும், மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து 4 பேரும், டெல்லி நிஜாமுதீனிலிருந்து 2 பேரும் வந்துள்ளனர். கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் 9 பேருக்கு நோய் பரவியுள்ளது. இதில் 6 பேர் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்த லாரி டிரைவர் குடும்பத்தை சேர்ந்த 3 பேர், அதே லாரியில் வந்த கிளீனரின் மகன் மற்றும் அவருடன் தொடர்பில் இந்த 2 பேருக்கும் நோய் பரவியுள்ளது.
கேரளாவில் தற்போது 31,616 பேர் வீடுகள் மற்றும் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 31,143 பேர் வீடுகளிலும், 473 பேர் மருத்துவமனையிலும் உள்ளனர். இதுவரை 38,547 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதித்ததில் 37 ,727 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. சுகாதாரத் துறையினர், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 3,914 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதித்ததில் 3,894 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. இன்று கொரோனா அறிகுறிகளுடன் 95 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கேரளாவில் தற்போது நோய் தீவிரம் உள்ள 34 பகுதிகள் உள்ளன. திருவனந்தபுரம், ஆலப்புழா மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் தற்போது கொரோனா நோயாளிகள் யாருமில்லை. இதுவரை வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு 33,116 பேர் சாலை வழியாக வந்துள்ளனர். வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் 1,406 பேரும், கப்பல் மூலம் 833 பேரும் வந்துள்ளனர். கேரளாவில் மாநிலத்தின் வெளியே இருந்து வந்தவர்கள் மூலம் 70 சதவீதம் பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்ததால் 30 சதவீதம் பேருக்கும் நோய் பரவியுள்ளது. கேரளாவில் நோய் பரவல் விகிதம் 1க்கு கீழ் தான் உள்ளது. மரண சதவீதமும் மிகவும் குறைவாகும். வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 19,000 பேர் சிவப்பு மண்டலத்தில் இருந்து வந்துள்ளனர். இதுவரை 1,33,000 பேர் பாஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 72,800 பேர் சிவப்பு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். 89,950 பேருக்கு இதுவரை பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. இவர்களில் 45,157 பேர் சிவப்பு மண்டலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த மே 7-ஆம் தேதி முதல் வெளிநாட்டில் இருந்து வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் வந்த விமானத்தில் வந்த அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து தற்போது ரயில்களில் வர உள்ளவர்களுக்கு பாஸ் கட்டாயமாக்கப்படும். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது கோவிட் 19 ஜாக்ரதா என்ற இணையதளத்தில் பாசுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.ரயில் நிலையத்தில் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும். நோய் அறிகுறி இருந்தால் மருத்துவமனைகளுக்கும், அறிகுறிகள் இல்லாதவர்கள் வீடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுவார்கள். வீடுகளுக்கு செல்பவர்கள் 14 நாள் தனிமையில் இருக்க வேண்டும். பாஸ் இல்லாமல் வருபவர்கள் நோய் அறிகுறி இருந்தாலும் இல்லாவிட்டாலும் 14 நாள் அரசு முகாம்களில் தனிமைப்படுத்த படுவார்கள். ரயில் நிலையங்களில் பரிசோதனை முடிந்த பின்னர் அவர்களை அழைத்துச் செல்ல வரும் வாகனத்தில் டிரைவர் மட்டுமே இருக்க வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் கூடுதல் வசதி ஏற்படுத்தப்படும். தற்போது பொது முடக்கம் மே 17ம் தேதியுடன் முடிவடைய இருப்பதால் நோய் தீவிரம் இல்லாத பகுதிகளில் ஆட்டோக்களை இயக்க அனுமதி அளிக்க வேண்டும். மாநிலங்களுக்குள் ரயில் போக்குவரத்தையும், மெட்ரோ ரயில் போக்குவரத்து மற்றும் மாவட்டங்களுக்குள் பஸ் போக்குவரத்தையும் அனுமதிக்க வேண்டும். தற்போது ஏசி ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது நோய் பரவலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே ஏசி இல்லாத ரயில்களை இயக்க வேண்டும். கேரளாவில் சாலையோரங்களில் முகக் கவசம் விற்பது கட்டுப்படுத்தப்படும். பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. ஆனாலும் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- Log in to post comments